வியாழன், 19 ஜூன், 2014

இந்தி எனும் மாயை (பாகம் -1)


நம்மிடம் ஒரு கெட்ட பழக்கம் உள்ளது. ஒரு பொய்யை முதல் முறையாக கேட்கும் போது அது பொய் என்பதை நாம் அடித்து சொல்லுவோம். அதே பொய்யை நம் காதில் அடிக்கடி விழும்படி யாரேனும் சொல்லிக்கொண்டே இருந்தால் ஒருநாள் நாம் அந்த பொய்யை உண்மையென சொல்லுவோம். இதே உத்தியை தான் மைய அரசு இந்தி திணிப்பு விவகாரத்தில் கடைப்பிடிக்கிறது. ஆரம்பத்தில் மைய அரசு இந்தியை அனைத்து மாநிலங்களும் கட்டாயம் பயிலவேண்டும் என சொன்னபோது தமிழ்நாட்டில் ஏற்பட்ட கொந்தளிப்பு, போராட்டம் போன்றவை பார்த்து அரசு பணிந்து தனது இந்தி திணிப்பு பாதையை மாற்றிகொண்டது. அதாவது நான் மேலே சொன்னது போல் ஒரு இந்தி விசயத்தை திரும்ப திரும்ப சொல்லும்போது என்றாவது ஒரு நாள் நாம் சொல்லும் விசயத்தை தமிழ்நாடு நிச்சயம் கேட்கும் என நம்பிக்கையுடன் கடந்த 30 ஆண்டுகளாக இந்தி தேசிய மொழி, படித்தால் உலகத்தை சுற்றலாம், இந்தியாவை சுற்றலாம், வேலைகிடைக்கும் என  பொய் பரப்புரையை பலமாக நம் காதில் சொல்லி சொல்லியே இப்போது வெற்றியும் கண்டுள்ளது. 'எறும்பு ஊர கல்லும் தேயும்' எனும் பொன்மொழி இந்தி விசயத்தில் உண்மையென நிருபிக்கப்பட்டுள்ளது.


அன்று இந்தி திணிப்பை எதிர்த்த திராவிட கட்சிகள் இன்று வாக்கிற்காக அதற்கு வக்காலத்து வாங்குகின்றன. அதேபோல் மக்களும் மிகவும் வேகமாக இந்தியை கற்க தொடங்கியுள்ளனர். இன்று தன் பிள்ளை படிக்கும் பள்ளியில் ஆங்கிலம் அல்லது இந்தியில் தான் பேசமுடியும் என பெருமையாக சொல்லிக்கொள்கின்றனர். தன்னை வளர்த்த தமிழை இழிவாக பேசுவதையும், ஆங்கிலத்தையும், இந்தியையும் பற்றி உயர்வாக பேசுவதை பெருமையாகவும் கருதுகின்றனர். 'மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே' என்ற பழமொழிக்கு ஏற்றவாறு இன்று தமிழகம் தன் தனித்தன்மையை வேகமாக இழந்து வருகிறது. மைய அரசு இதை படி என்பது தவறாக தெரியவில்லையாம், ஆனால் தமிழக அரசு தமிழை படி என சொல்வது இவர்களுக்கு தவறாக தெரிகிறதாம். இதை பொறுத்துக்கொள்ளாத சில கொல்லையடிக்கும் கல்வி நிறுவன அமைப்புகள் நீதி மன்றத்தை அணுகுவது எவ்வளவு ஒரு கேவலமான செயலாகும். இதுபோன்ற நிகழ்வுகள் தமிழ்நாட்டில் தான் நடக்க முடியும்.





  • அப்படி என்ன சிறப்பு இந்த இந்தி மொழியில் உள்ளது?
  • வட இந்தியா முழுவதும் இந்த மொழியை தான் மக்கள் பேசுகிறார்களா?
  • இந்தி நம் நாட்டு மொழியல்லவா! ஏன் வெளிநாட்டு ஆங்கிலத்தை பேசவேண்டும்?
  • இந்தி இந்துக்களின் புனித மொழியல்லவா, இந்துக்கள் பேச என்ன தயக்கம்?
  • இந்தியை வளைகுடா நாடுகளில் உள்ளவர்கள் கூட பேசுகிறார்களே, நாம் மட்டும் ஏன் பேச தயங்க வேண்டும்?
  • இந்தியை கற்றுக்கொண்டால் இந்தியாவின் எல்லா பகுதிகளுக்கு செல்லலாமே, எல்லோருடன் தொடர்புக்கொள்லாமே ஏன் தடுக்கவேண்டும்?
  • இந்தி கற்றுக்கொண்டால் மத்திய அரசு பணிகளில் எளிதாக வேலை கிடைக்குமே!
  • இந்தி தெரியவில்லை என்றால் வடமாநிலத்தவர் கேவலமாக நம்மை பார்கிறார்களே!

  • என்றெல்லாம் நாளொரு மேனியாய் பொழுதொரு வண்ணமாய் புலம்பிக்கொண்டிருக்கும் நம் புத்திசாலி தமிழன் இந்தியை பற்றிய விசயங்களை தெளிவாக தெரிந்துகொள்ளும்பொருட்டு இந்த கட்டுரையை எழுதுகிறேன். வாருங்கள் அப்படி என்னதான் இந்தியில் உள்ளது என பார்க்கலாம்.

    இந்திமொழி தோன்றிய வரலாறு:
    இந்தியா நாட்டின் அலுவல் மொழியெனச் சொல்லப்படும் இந்தி, தமிழைப் போன்று பழமை வாய்ந்த மொழியில்லை. இந்தியாவின் வடமேற்கு பகுதிகளில் மொகலாய அரசர்கள் படையெடுத்து அப்பகுதிகளைக் கைப்பற்றி, அங்குத் தங்களது ஆட்சியை நிலைநாட்ட தில்லியை மையாமாகக் கொண்டு ஆட்சி செய்யும் போது உருவாகிய மொழி தான் இந்தி மொழி. சுமார் 830 ஆண்டுகளுக்கு முன்னர் 'முகமது கோரி' எனும் மொகலாய அரசர் கி.பி 1175 ஆம் ஆண்டு இந்திய குறுநில மன்னர்களை வென்று அவர்கள் ஆட்சி செய்த பகுதிகளைக் கைப்பற்றினார். அன்று முதல் அவரது ஆட்சி வேருன்றி வளர்ந்தது. அதைத் தொடர்ந்து கி.பி 1340 ஆம் ஆண்டு வாக்கில் 'முகமது பின் துக்ளக்' என்ற மொகலாய அரசரின் கட்டுபாட்டுக்குள் அப்பகுதிகள் வந்துள்ளன. அவரும் தில்லியை மையமாக வைத்து தனது ஆட்சியைத் தொடர்ந்துள்ளார். அந்த வேளையில் தில்லியிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இருந்த மக்கள் சிதைவான பிராகிருத மொழி போன்ற மொழி ஒன்றை பேசி வந்தனர். அம்மொழி பேச்சு வழக்கில் மட்டுமே இருந்தது, எழுத்து வழக்கு சிறிதும் இல்லை, இலக்கண வழக்கு இல்லவே இல்லை. இந்த மொழியை நாகரீகம் என்னவென்று தெரியாத மக்களால் பேசப்பட்டு வந்தது. அம்மொழி அவப்போது பலப்பல வடிவில் மாறுதல் அடைந்துகொண்டே இருந்துள்ளது. இதுபோன்ற காரணங்களால் அம்மொழியை அறிவுடையவர்களோ, அறிஞர்களோ, ஆர்வலர்களோ சீர்திருத்தி, சொற்களைச் செம்மைபடுத்தி, இலக்கணங்களை வகுக்க முன்வரவில்லை. இதனால் தான் எந்த ஒரு நூல்களையும் அந்த மொழியில் இயற்றமுடியாமல் போனது.

    தில்லியில் நிலைபெற்று இருந்த மொகலாய அரசுகள் தாங்கள் கொண்டுவந்த அரபி மற்று பாரசீக மொழியின் ஏரளாமான சொற்களை அப்பகுதி சிதைவான பிராகிருத மொழியுடன் சேர்த்து பேசத்தொடங்கினர். அப்பகுதிகளில் பேசப்பட்ட சிதைவான பிராகிருத மொழி மேலும் சிதைவடைந்து கலப்பின மொழியாக மாறியது. இந்தக் கலப்பின மொழிக்கு அப்போதைய மொகலாய அரசு வைத்த பெயர் தான் 'உருது'. உருது என்றால் பாசறை, பாடி அல்லது படைவீடு என்று பொருள். தாங்கள் ஆட்சி செய்யும் பாசறையில் உருவான மொழி என்பதால் அம்மொழிக்கு உருது என வைத்தனர் மொகலாயர்கள். இவ்வாறு தான் உருது எனும் மொழி பிறந்தது.

    மாயை தொடரும்...

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக

    இமயம் எனும் பெயர் தமிழ் தான் தெரியுமா?

    இமயமலை என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் சமவெளியையும் திபெத்திய மேட்டு நிலத்தையும் பிரிக்கும் ஒரு மலைத்தொடர் ஆகும். உலகிலேயே ஒப்பற்ற மிகப...